
தமிழகத்தில் H1N1 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் பருவகால நோய்களை தடுப்பது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவத் துறை அதிகாரிகள் மற்றும் இதய நோய் வல்லுநர்கள் உடன் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் தமிழக முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் இருதநோய் வல்லுனர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் காப்பீடு திட்டத்தின் செயல்பாடு 48% தமிழகத்தில் இருந்து வருகிறது. அதேபோல் பருவநிலை மாற்றம் வரும் போது காய்ச்சல் அதிகரிப்பது இயல்பு தான். அந்தவகையில் H1N1 பாதிப்பு இதுவரை 1,166 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 46 பேர் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். இதில் மக்கள் பெரிய அளவில் அச்சமடைய தேவையில்லை.

செப்.21-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஆயிரம் இடத்தில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும். இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பெற்றோருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மத்திய சுகாதாரத்தினுடைய உதவி கேட்கப்படும். காய்ச்சல், கொரோனா உள்ளிட்டவை அனைத்தும் கட்டுப்படுத்தும் நிலையில் தான் இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் இன்று காய்ச்சல் சிறப்பு முகாம் செயல்பட உள்ளது. மக்கள் இதை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்ளவும்” என்றார்.
இதையும் படிக்க: இன்ப்ளூயன்சா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், கொரோனா... எல்லா பக்கமும் நிரம்பும் வார்டுகள்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News