
தமிழகத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையோடு இருக்கவேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறுதி மொழியை வாசித்து தொண்டர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். அப்போது.... கடவுளின் பெயரால் ஏற்றத் தாழ்வுகளையும், ஜாதி, மத வேறுபாட்டையும் உருவாக்கினார்கள் இதைத் தான் பெரியார் எதிர்த்தார். அனைவருக்கும் சமமாக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்கு தான் திராவிட இயக்கம் செயல்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் சமம், அனைவருக்கும் சம உரிமைகள் வேண்டும் என்று தான் பெரியாரின் கருத்தாக உள்ளது.
இந்துக்களை பிரிப்பதோ, வெறுப்பதற்கோ திமுகவின் எண்ணம் இல்லை,தமிழகத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதுதான் திராவிடம் மாடல் என்று தெரிவித்தார். தமிழகத்தில் ஆண்களும், பெண்களும் சமமாக கருதப்பட வேண்டும் என்ற காலத்தை உருவாக்கியது தான் பெரியாருடைய முயற்சி என பெருமிதத்துடன் பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News