
துளசி என்றதுமே அதன் வாசமும் குணமும்தான் அனைவரது நினைவுக்கும் எட்டும். நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் சளி, இருமல் போன்ற உபாதைகள் தீர துளசியை மென்று சாப்பிட்டு வருகிறார்கள்.
ரத்த ஓட்டத்தை சீராக்கவும், சிறுநீரக பாதிப்பை நீக்கவும், தோல் நோய்களை குணப்படுத்தவும், ஜீரண உபாதைகள் நீங்க, பூச்சிக் கடியை சரி செய்ய, சுவாச பிரச்னைகளை சீராக்க, தொற்றுகளை குணப்படுத்துவதற்கான ஆன்ட்டி பாக்டீரியாவாகவும் துளசி இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படியாக எண்ணற்ற குணநலன்கள் துளசிக்கு இருந்தாலும் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற சொற்றொடரை போல துளசியை அதிகளவில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருப்பது அரிதுதான்.
அதன்படி துளசியின் குணநலனை பார்த்தது போல, அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தற்போது காணலாம்.
கர்ப்ப காலத்தில் ஏற்றதல்ல:
கருவுற்றிருக்கும் பெண்கள் அதிகளவில் துளசியை சாப்பிடுவதால் அவர்களது ஆரோக்கத்தியத்திற்கு நல்லதல்ல. சில சமயங்களில் கருக்கலைப்புக்கு வித்திட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிகமாக துளசி சாப்பிட்டால் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதன் காரணமாக கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்துமாம்.
ரத்தத்தில் சர்க்கரை மாறுபாடு:
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் தங்களுடைய உணவு முறையில் துளசியை சேர்த்துக்கொண்டால் அது ரத்த ஓட்டத்தில் சில ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும்.

இனப்பெருக்கத்திற்கு எதிர்வினையூட்டும்:
துளசி நல்ல பலன்களை கொடுக்கும் என பல மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் தெரிவிக்கப்பட்டாலும் அதிகபடியாக துளசியை உட்கொள்வதால் ஆண்களுக்கு விந்தணுக்களின் அளவு குறைய நேரிடும் என்றும், பெண்களுக்கு கருப்பை மற்றும் கருப்பைவாய் சுருக்கம் ஏற்படும் என்றும் சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பற்களை கறையாக்கும்:
துளசி இலையில் மெர்க்குரியின் தன்மை அதிகமாக இருப்பதால் அவற்றை மென்று சாப்பிடும் போது பற்களின் நிறம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
கல்லீரலை பாதிக்கச் செய்யும்:
துளசியில் யூஜெனால்கள் நிரம்பியுள்ளதால் அது கடுமையான கல்லீரல் பாதிப்பு, குமட்டல், இதயத்துடிப்பை அதிகப்படுத்துவது மற்றும் வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
மேற்குறிப்பிட்டிருக்கும் எச்சரிக்கைகள், குறிப்புகள் அனைத்துமே பொதுவான மருத்துவ நலன் சார்ந்தவையே ஆகும். துணை நோய் உள்ளவர்கள், ஆரோக்கியமான வாழ்வை பின்பற்றுவோர் தவறாது குடும்ப மருத்துவரோ அல்லது பொது மருத்துவரை அணுகி அவர்களது உரிய அறிவுறுத்தலை பெற்றுக்கொள்ளலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News