
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் போராட்டத்தில் நோயாளிகள் தன்னந்தனியாக இல்லை என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டினால் ‘இதுவும் கடந்துபோகும்’ என்று அதை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள்
தொழிலதிபரான பாபர் ஷேக், லிங்க்ட்இன் என்ற சமூக வலைதளத்தில் புற்றுநோயுடன் போராடும் தனது மனைவியை பற்றி உருக்கமாக எழுதி பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ''கடந்த ஜனவரி 6-ஆம் தேதி அன்று என் மனைவி ஜஹாராவின் மார்பில் ஒரு கட்டி இருப்பதைக் கண்டேன். தாமதிக்காமல் மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். இரண்டு வாரங்கள் மீண்டும் மீண்டும் செக்கப், ஸ்கேன் என பரபரப்பாக ஓடியது. இறுதியில் சந்தேகப்பட்டது போலவே மனைவி ஜஹாராவுக்கு மார்பக புற்றுநோய் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. புற்றுநோய் பாதிப்பின் இரண்டாவது நிலையில் இருந்தார். நிறைய குழப்பங்கள், நிறைய கவலைகள் சூழ்ந்திருந்தது. இருப்பினும் புற்றுநோயுடன் போராடுவதற்கான மனநிலையை தயார்படுத்தி கொண்டோம்.
இந்த பதிவு வெறும் புற்றுநோயை பற்றியது மட்டுமல்ல. ஜஹாரா முழுநேரமாக பிஸ்னஸ் செய்து வந்தவர். சமீபத்தில்தான் நான் புதிதாக ஒரு வேலையில் சேர்ந்தேன். இந்த நேரத்தில்தான் எங்கள் வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய சிரமப்பட்டோம். இருப்பினும் புற்றுநோயை எதிர்த்து போராடினோம். அதற்கேற்றவாறு எங்கள் அன்றாட நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டோம். சிகிச்சை, ஸ்கேன், உணவு, தூக்கம் என பம்பரமாக சுழன்று வந்தோம்.

புற்றுநோய் ஜஹாராவை உடல்ரீதியாக பாதித்ததே தவிர மனரீதியாக பாதிக்கவில்லை. மன தைரியத்தை பற்றிக்கொண்டு அன்றாட வாழ்க்கையை எப்போதும்போல் நகர்த்தினார். தான் பார்த்து வந்த பிசினஸை விட்டுவிடவில்லை. பழைய உத்வேகத்துடன் பணிகளை தொடர்ந்தார். தொழிலும் நல்ல முன்னேற்றம் கண்டது.
இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது என்னவெனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வு ரீதியாக ஓர் ஆதரவு தேவை. அந்த ஆதரவு முதலில் குடும்பத்திலிருந்து கிடைக்கும்போது புற்றுநோயுடனான போராட்டம் எளிதாகிறது. ஜஹாராக்கு எங்கள் குடும்பம், நண்பர்கள், அவருடைய அலுவலக சகாக்கள், எங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்தும்கூட ஆதரவும் அன்பும் கிடைத்தது. அலுவலகம் அவருக்கு அழுத்தத்தை கொடுக்காமல் முழு சுதந்திரம் கொடுத்தது. அனைத்து தரப்பிலிருந்தும் பன்மடங்காக கிடைத்த இந்த ஊக்கத்தாலும் ஆதரவாலும்தான் ஜஹாரா எப்போதும்போல பயணித்துக் கொண்டிருக்கிறாள்'' என அந்தப் பதிவு உருக்கமாக முடிகிறது. ஜஹாரா புற்றுநோய் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என அந்தப் பதிவில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

பொதுவாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவா்கள் வாழ்க்கையில் நிலைகுலைந்து முடங்கி விடுகின்றனா். எனவே, புற்றுநோயை எதிர்த்துப் போராடும் போராட்டத்தில் நீங்கள் தன்னந்தனியாக இல்லை என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டினால் ‘இதுவும் கடந்துபோகும்’ என்று அதை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே இந்த பதிவு உணர்த்தும் பாடமாக இருக்கிறது.
இதையும் படிக்க: இன்ஸ்டாவில் நீச்சல் உடையில் தோன்றிய பேராசிரியை - ரூ.99 கோடி நஷ்டஈடு கோரும் பல்கலைக்கழகம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News