பர்கூர் அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அங்கிநாயக்கனப்பள்ளி என்னும் இடத்தில் ஜெகதீஷ் என்பவர் டீக்கடை நடத்தி வந்தார். இவரை பார்ப்பதற்காக சின்ன பர்கூரை சேர்ந்த பாக்கியராஜ், மல்லப்பாடி நாடார் கொட்டாயைச் சேர்ந்த சுஜித் குமார் மற்றும் பிரசாந்த் ஆகிய 3 பேரும் அங்கிநாயனப்பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அங்கு வந்த 3 பேரும் ஜெகதீசுடன் சேர்ந்து சாலையோரம் நடந்து சென்றுள்ளனர். அப்போது சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற நால்வர் மீதும் வேகமாக மோதியது. இதில், நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பாக்கியராஜ், சுஜித் குமார், மற்றும் பிரசாந்த் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த ஜெகதீஷ் மற்றும் ஓசூர் மூக்கொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் தணிகை மலை ஆகிய இருவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பர்கூர் போலீசார் விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News