திண்டுக்கல்: காதலுக்கு எதிர்ப்பு; பெண்ணின் உறவினரால் இளைஞர் அடித்துக் கொலை

ஆத்தூர் அருகே காதல் பிரச்னையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் அழகு விஜய் (24). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், இதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் மகள் துர்காவை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களது காதல் துர்கா வீட்டாருக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளனர். காதல் விவகாரம் தொடர்பாக அழகுவிஜய் மற்றும் துர்காவின் அண்ணன் அஜித் ஆகியோரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்றிரவு காதல் ஜோடிகள் தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

image

இதையறிந்து அங்கு வந்த அஜித், தங்கை துர்காவை கண்டித்ததுடன் அவர் கண் முன்பே அழகு விஜயை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அழகு விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தந்தை மகன் இருவரும் சேர்ந்து இறந்துபோன அழகு விஜயை உடலை சாக்கு பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று ஆத்தூர் காமராஜர் அணையின் கரை ஓரத்தில் உள்ள புதருக்குள் வீசிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து காலையில் அஜித் வீட்டின் அருகில் இரத்தமாக இருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் தெரித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது தமிழ்செல்வன் உண்மையை ஒப்புக்கொண்டு பிரேதத்தை சாக்கு மூட்டையில் கட்டி தூக்கிப் போட்ட இடத்தை காட்டியுள்ளார்.

image

இதனையடுத்து அழகு விஜய் சடலத்தை கைப்பற்றிய செம்பட்டி போலீசார், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கொலை குற்றவாளி அஜித்தை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post