இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த மினி பேருந்து மோதி இருவர் உயிரிழந்தனர்.
சென்னை செம்மஞ்சேரியில் இருந்து சோழிங்கநல்லூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் இருவர் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மினி பேருந்து மோதியதில் தலை நசுங்கி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னால் அமர்ந்திருந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது அவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருவரும் நாவலூரில் இருந்து துரைப்பாக்கம் செல்வதற்காக வந்தபோது விபத்தில் சிக்கியதாகவும், அவர்களது பெயர் அபிஷேக் சிங் (30), ரூபேஷ் (27), என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மினி பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News