
ஒரு கொலையை தற்கொலையாக மாற்றிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாலாஜி. இவர் சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் குற்ற தடுப்புபிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பின்னர், கடந்த 24ஆம் தேதி முதல் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு இவர் மாற்றப்பட்டார். இதையடுத்து, கடந்த சில தினங்களாக திருச்செந்தூரில் உள்ள கோயில் காவல் நிலையத்திற்கு குற்ற பிரிவு காவல் ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழலில், காவல் ஆய்வாளர் பாலாஜியை திடீரென பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் துறை உத்தரவு பிறப்பித்தது.

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அதாவது, கடந்த 2019-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்திருக்கிறார் பாலாஜி. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முக்குளம் பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த காளிராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தை காவல் ஆய்வாளர் பாலாஜி குற்றவாளிகளுடன் இணைந்து தடயங்களை அழித்து இதனை தற்கொலை வழக்காக மாற்றியதாக கூறப்படுகிறது.
மேலும் சில மாதங்களுக்கு முன்னர் இச்சம்பவம் குறித்து மறு ஆய்வு செய்தபோது, குற்றவாளிகளுக்கு சாதகமாக ஆய்வாளர் பாலாஜி செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாலாஜி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News