
சென்னை வானரகத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் இடம் தயாராக உள்ளது. இக்கூட்டத்தில் தற்காலிக புதிதாக பொதுச்செயலாளர் நியமனத்தை மேற்கொள்ள இபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுக இதுவரை சந்தித்த பொதுச்செயலாளர்கள் யார் யார், எந்தெந்த வருடம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது பற்றிய சின்ன ஃப்ளாஷ்பேக், இங்கே...
1974 - அதிமுக-வின் நிறுவனர் எம்ஜிஆர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1978 - நாவலர் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராக தேர்வானார்
1980 - ப.உ.சண்முகம் பொதுச்செயலாளராக தேர்வானார்

1984 - எஸ்.ராகாவனந்தம் பொதுச்செயலாளராக தேர்வானார்
1986 - மீண்டும் எம்ஜிஆர் பொதுச்செயலாளராக தேர்வானார். அதே ஆண்டு எம்ஜிஆரால் மூத்த துணை பொதுசெயலாளர் பதவி உருவாக்கப்பட்டு எஸ்.ராகாவனந்தம் நியமிக்கப்பட்டார். போலவே இந்த ஆண்டில் துணை பொதுசெயலாளர்களாக ஹெச்.வி.ஹண்டே, காளிமுத்து ஆகியோரும் எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டனர்.
இந்த நேரத்தில் (சரியாக 1987-ல்), எம்.ஜி.ஆர். உயில் ஒன்றை எழுதினார். அதில் ‘அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டால், தற்போதிருக்கும் உறுப்பினர்களில் 80 சதவிகிதம் பேர் ஆதரவைப்பெற்றவர்கள் தலைமையில் கட்சி வழிநடத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.

1989 - எம்ஜிஆர் மறைவிற்கு பின் அணிகள் பிரிந்து மீண்டும் இணைந்து போது ஜெயலலிதா முதல் முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் மறைவு வரை 30 ஆண்டுகளுக்கு அவரேவும் பொதுச்செயலாளராக இருந்தார்.

ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த போது மூத்த துணைபொது செயலாளராக - எஸ்.டி.சோமசுந்தரம், ப.உ.சண்முகம், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் செயல்பட்டனர்.
2016 - ஜெயலலிதா மறைவிற்கு பின் டிசம்பர் 29ம் தேதி சசிகலா கட்சியின் தற்காலிக பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின் கட்சியில் ஏற்பட்ட பிரிவை அடுத்து பொது செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி கே.பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வாகின்றனர்.
2022 - தற்போது மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக இன்று (ஜூலை 11, 2022) நடைபெறும் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News