
விழுப்புரம்: வானூர் அடுத்த பெரம்பையில் நித்யானந்தா போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் 18 அடி உயர சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பெரம்பை கிராமம் ஐஸ்வர்யா நகரில் வசிக்கும் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு கோவிலைக் கட்டியுள்ளார்.
இங்கு 27 அடி உயரத்தில் பிரமாண்டமான முருகன் சிலையும், 18 அடி உயரத்தில் நித்யானந்தா போல இருக்கும் உருவ சிலையும் அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த கோவிலுக்கு பத்துமலை முருகன் கோவில் என பெயரிடப்பட்ட நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், நித்யானந்தா சிலையை பார்த்த போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர், ஏற்கெனவே நித்யானந்தா சிவன் போல் வேடமணிந்து கையில் சூலாயுதத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது. இதுகுறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்டபோது இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர். ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்கவில்லை என்று கூறினார்.
பின்னர் கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியனின் அறைக்கு சென்று பார்த்தபோது அவரது அறை முழுவதும் நித்யானந்தா அவருக்கு ஆசி வழங்குவது போன்ற புகைப்படமும் நித்யானந்தா உருவத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பது என நிறைய புகைப்படங்கள் இருந்தது,

ஒரு சில பக்தர்கள் அந்த சிலையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கும்பாபிஷேக அழைப்பிதழில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர் கே.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து பங்கேற்பார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News