சாந்தி தியேட்டர் பங்குகளில் உரிமை கோரிய வழக்கு – விசாரணை 18ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

சாந்தி தியேட்டர் பங்குகளில் தங்களுக்கும் உரிமை வழங்கக் கோரி நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை உள்ளதாகக் கூறி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

image

இந்நிலையில் சாந்தி தியேட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான 13,500 பங்குகளில், 600-க்கும் மேற்பட்ட பங்குகள், சிவாஜி கணேசன் குடும்பத்தினர் வசம் உள்ளது. இதையடுத்து சாந்தி தியேட்டரை வாங்கிய அக்ஷயா ஹோம்ஸ் நிறுவனம், அங்கு வணிக வளாகமும், அடுக்குமாடி குடியிருப்பும் கட்டியுள்ளது.

சாந்தி தியேட்டர் பங்குகளில் தங்களுக்கும் உரிமை உள்ளதாகக் கூறி, நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010 ஆம் ஆண்டிலேயே கைமாறி விட்டதாகவும், கட்டுமானம் முடித்த பிறகும், அவர்கள் குடும்ப பிரச்னை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக தனியார் கட்டுமான நிறுவனமான அக்ஷயா ஹோம்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

image

நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில், அனைத்து நடைமுறைகளும் ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்களான சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில், வழக்கில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை ஜூலை 18 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post