
கோவை கரும்புக்கடை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்துக் குதறிய தெருநாய் இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84-வது வார்டில் உள்ள கரும்புக்கடை மற்றும் ஞானியார் நகர் பகுதியில் அப்பகுதி குழந்தைகள் வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்தனர். விடுமுறை தினம் என்பதால் சற்று அதிகமாகவே கூட்டம் இருந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் சுற்றிக் திரிந்த தெருநாய் ஒன்று திடீரென விளையாடிக் கொண்டிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்தக் குதறியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து நின்றனர். பின்னர் நாயை விரட்டி விட்டு குழந்தைகள் அனைவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து நாய் கடித்து காயமடைந்தவர்களை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News