"தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்..." - ஓபிஎஸ் திடீர் ட்வீட்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதிமுகவுக்கு யார் தலைமை வகிப்பது என்பது தொடர்பான சர்ச்சை உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என பெரும்பாலானோர் கோஷம் எழுப்பினர். அன்று முதலாகவே அதிமுகவில் பரபரப்பு ஏற்பட தொடங்கி விட்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தத்தம் தங்கள் தலைவர்களை தலைமையேற்க வர வேண்டும் என மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியதால் இந்த விவகாரம் பூதாகரமானது.

image

இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்கள் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். மொத்தமுள்ள 78 மாவட்ட செயலாளர்களில் ஈபிஎஸ்-க்கு 68 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்-க்கு 7 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இந்த சூழலில், நாளை அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதால் ஓபிஎஸ் தரப்பினர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஓபிஎஸ் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "அதிமுகவில் நிலவி வரும் அராஜக மற்றும் சர்வாதிகாரப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட இணைச் செயலாளர் கேசவன் தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்த செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்" என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post