
இலங்கை மக்களுக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியால் வாடும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய நிதிஉதவி வழங்குமாறு பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தனது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்குகிறேன் என்று அறிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இலங்கை மக்களின் துயரை துடைக்கும் வகையில் தமிழக முதல்வர், இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வரின் வேண்டுகோளின்படி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவோருக்கு உரிய வருமானவரி விலக்கு அளிக்கப்படும். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நான் என்னுடைய ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குகிறேன். மனிதாபிமான அடிப்படையில் நிவாரண நிதி வழங்க விரும்பும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற பண உதவியை மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ, இசிஎஸ் மூலமாகவோ, காசோலை, வரைவு காசோலை மூலமாகவோ வழங்கலாம்.

நன்கொடை வழங்குபவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு பல்வேறு பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News