“அடுத்தமுறை நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன்” என துருக்கியில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீராங்கனை நிவேதா பேட்டியளித்துள்ளார்.
துருக்கி நாட்டில் `இஸ்தான்புல்லில் வாகோ ஏழாவது சர்வதேச துருக்கிய ஓபன் குத்துசண்டை உலகக் கோப்பை’ நடைபெற்று வருகிறது. இதில் 44 நாடுகளை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். அதில் சென்னை சூளைமேட்டில் சேர்ந்த 14 வயது உடைய நிவேதா என்ற சிறுமி கலந்துகொண்டு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை பெற்று சாதனை படைத்திருக்கிறார். இதையடுத்து துருக்கியில் இருந்து சென்னை வந்த குத்துசண்டை வீராங்கனை நிவேதாவை விமான நிலையத்தில் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பூங்கொத்து கொடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
விமான நிலையத்தில் வைத்து குத்துச்சண்டை வீராங்கனை நிவேதா கூறுகையில், “வெளிநாட்டு வீரர்களுடன் குத்து சண்டை போடுவது மிகவும் கடினமாக இருந்தது. நான் மூன்று வேளையும் பயிற்சிகள் செய்தும் என்னால் தங்கப்பதக்கத்தை வெல்ல முடியவில்லை. அடுத்து வரும் காலங்களில் சர்வதேச அளவில் நிச்சயமாக தங்கப்பதக்கத்தை வெல்வேன். எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கு பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு என் பயிற்சிக்கு இன்னும் ஊக்கம் அளித்தால் நிச்சயம் கடுமையான பயிற்சி பெற்று தங்க பதக்கம் வெல்வேன்” என்றார்.
இதையும் படிங்க... 31 ஆண்டுகால சிறை...! விடுதலை காற்றை சுவாசிப்பாரா பேரறிவாளன்? -இன்று தீர்ப்பு
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது பயிற்சியாளர் சுரேஷ் பாபு கூறுகையில், “துருக்கி நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிளான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் சென்னையை சேர்ந்த நிவேதா மட்டுமே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். தமிழகத்தின் முதல் பெண்ணாக குத்துச்சண்டை போட்டியில் பதக்கத்தை வெற்றி பெற்றுள்ளார். இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்று.
தமிழகத்தில் தொடர்ச்சியாக குத்துச்சண்டை வீராங்கனைகள் உருவாகி வருகின்றனர். இனிவரும் காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து இவர்கள் பங்கேற்பார்கள். தமிழக அரசும் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News