'நெருங்கி பழகிய இளைஞர் கைவிட்டார்' - நியாயம் கேட்டு பெண் தர்ணா

கோவில்பட்டி அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள தலையால்நடந்தான்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த காளிரத்தினம் என்பவரின் மகள் மகாராணி (25). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் இசக்கிமுத்து என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமண ஆசைவார்த்தை கூறிய இசக்கிமுத்து, அவருடன் நெருங்கி பழகினார். இதில் மகாராணி கர்ப்பமடைந்தார்.

image

இதனைத் தொடர்ந்து அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இசக்கிமுத்துவிடம் கூறவே அவர், கருவை கலைத்து விட்டால் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாத்திரை கொடுத்ததாக தெரிகிறது. இதில் மகாராணியின் கரு கலைந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகியதால் மகாராணி மீண்டும் கர்ப்பமடைந்தார்.

இதுகுறித்து மகாராணி, இசக்கி முத்துவிடம் கூறிய போது அவர், வழக்கம்போல் கர்ப்பத்தை கலைத்து விடு என்று கூறியதாக தெரிகிறது. மேலும் இசக்கி முத்துவின் தாய் இசக்கியம்மாள், தந்தை செல்லப்பா, அவரது சகோதரி இசக்கியம்மாள், அத்தை துர்க்கையம்மாள் ஆகியோர் சேர்ந்து கருவை கலைத்து விடு அல்லது நகையுடன் வந்தால் உன்னை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியதாக தெரிகிறது.

image

இதுகுறித்து மகாராணி கடந்த 24 ஆம் தேதி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல ;நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி இசக்கிமுத்து உள்ளிட்ட 5 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகாராணி மற்றும் அவரது தாய் ஆகியோர் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி உதயசூரியன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து தாய், மகள் இருவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post