அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ 2.25 கோடி மோசடி செய்த கிராம நிர்வாக உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே 94 கரியமாணிக்கம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணிபுரிந்தவர் செல்வராஜ் (52). இவர் இந்த கிராமத்தில் உள்ள ஒன்பது நபர்களிடம் படிப்புக்கேற்ற அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலா ரூபாய் 5 லட்சம் வீதம் 45 நபர்களிடம் ரூ. 2.25 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.
செல்வராஜூடன் துறையூர் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா இவரது தம்பி சந்துரு ஆகியோரும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பணம் கொடுத்த நபர்களுக்கு வேலை கிடைக்காததால் பணத்தை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், நீண்ட நாட்களாகியும் பணத்தை திருப்பிக் கொடுக்காததால், பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் துறையூர் காவல் நிலையத்தில் சந்துரு, பிரசன்னா ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சந்துரு கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து செல்வராஜ் மற்றும் பிரசன்னா ஆகியோர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து பணம் கொடுத்தவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் செல்வராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News