
திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி, தாக்கி இழுத்துச்சென்ற வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர் நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, வண்ணாரப்பேட்டையில் உள்ள 49-ஆவது வார்டில், கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில், நரேஷின் சட்டையை சில அதிமுகவினர் கழற்றி அரை நிர்வாணமாக தெருவில் இழுத்துச்சென்றனர்.
அரைநிர்வாணமாக்கி தாக்கப்பட்ட நரேஷ் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து நள்ளிரவில் சென்னை ஜார்ஜ்டவுன் 15-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முரளிகிருஷ்ணா முன்பு அவரை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அங்கு கூடியிருந்த அதிமுகவினர், காவல்துறையினர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஈடுபட்டனர். இதன்காரணமாக கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
அப்போது கைது செய்யும் அளவுக்கு வழக்கு பதியப்படவில்லை என்றும், ஏற்கெனவே உள்ள உச்சநீதிமன்ற உத்தரவுகளின் படி ஜாமீனில் விடுவிக்கலாம் என ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், ஜெயக்குமார் வெளியே சென்றால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்படும் எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். நீண்ட நேர விவாதத்துக்கு பிறகு ஜெயக்குமாரை மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க கோரும் மனு இதே நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். நீதிபதி உத்தரவையடுத்து, ஜெயக்குமார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே கள்ள ஓட்டு போட முயன்றதை தடுத்தபோது திமுகவினர் தம்மை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த கொளஞ்சிநாதன், ஸ்ரீதர், மற்றும் சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
இதையும் படிக்க: "வலுக்கட்டாயமாக என் கணவரை காவல்துறையினர் இழுத்துச் சென்றனர்" - ஜெயக்குமார் மனைவி பேட்டி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News