
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நடந்த கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை மாவட்டம் செக்கானூரணியைச் சேர்ந்தவர் சிவபாண்டி (வயது 48), செல்வம் (55), பாண்டியராஜன் (44). இவர்கள் தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆண்டிப்பட்டி கணவாய், திம்மரசநாயக்கனூர் விலக்கு அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த கார் மீது மோதியதோடு கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த வேன் மீதும் பயங்கரமாக மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகபிரபு (44), மதுரை மாவட்டம் செக்கானூரணியைச் சேர்ந்த சிவபாண்டி (48), செல்வம் (55) , மற்றொரு காரை ஓட்டி வந்த பிச்சம்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35) ஆகிய 4 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் நிகழ்விடம் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து படுகாயங்களுடன் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News