புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதி கிராமத்தில் இன்னும் சற்று நேரத்தில் (காலை 7.30 மணிக்கு) ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அந்த போட்டியின் தேதி மாற்றப்பட்டு இன்று இன்னும் சற்று நேரத்தில் 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்த போட்டியில் முன்பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் களமிறக்கப்பட உள்ள நிலையில், அந்த காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து வாடிவாசலுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைபோல் இந்த போட்டியில் 250 மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் பங்கேற்க உள்ள நிலையில், அவர்கள் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்களை சமர்பித்து உடல் நிலையை சோதித்தபின் வீரர்கள் சுழற்சி முறையில் காளைகளை பிடிக்கும் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், களையர்களுக்கும் தங்க நாணயம், வெள்ளி நாணயம், கட்டில்,பீரோ, அண்டா உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 150 பார்வையாளர்கள் மட்டுமே இந்த போட்டியை காண அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இக்கிராமத்தின் எல்லை பகுதிகளில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்து வெளியூர் நபர்கள் உள்ளே வராதவாறு தடுத்து அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News