
செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தையை கடத்த வந்ததாகக் கூறி வடமாநில இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வடமாநில இளைஞர் ஒருவர் தூக்கி முத்தமிட்டுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வடமாநில இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து கம்பத்தில் கட்டிவைத்தனர்.

இந்நிலையில், விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்த வந்ததாகக் கூறி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட வடமாநில இளைஞர்கள் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அதில், அவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், மதுபோதை தலைக்கு ஏறியதால் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி முத்தமிட்டதும் தெரியவந்தது. அவரை மறைமலைநகர் போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News