
மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறும்படி நிர்பந்திக்காமல், டிராக்டர் டிரைலர்களை பதிவுசெய்ய வேண்டுமென தமிழக போக்குவரத்து துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டிற்கான டிராக்டர் டிரைலர் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஈரோட்டை சேர்ந்த சக்தி விநாயகா இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய மோட்டார் வாகன திருத்த விதிகளில், டிராக்டர் டிரைலரை பதிவு செய்ய மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி தங்கள் நிறுவனம் தயாரிக்கும் டிரைலர்களை ஒப்புதலுக்காக விண்ணபித்தபோது, அந்த இணையதளத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், இந்த நடைமுறை தமிழகம் தவிர பிற மாநிலங்களில் நிறுத்திவைத்துள்ளதால், தமிழகத்திலும் விவசாயிகள் வாங்கும் டிராக்டர் டிரைலரை இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தாமல் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், இணையதளத்தில் ஒப்புதல் பெறாமல் வாகனத்தை பதிவு செய்ய முடியாது என்றும், ஒப்புதல் பெறுவதில் தாமதமாகிறது என்பதற்காக அது இல்லாமல் பதிவு செய்யும்படி கோர முடியாது என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மோட்டார் வாகன இயந்திரத்தால் இயங்கும் டிராக்டருக்கு தான் இணையதள பதிவு கட்டாயம் என்றும், டிரைலரை மோட்டார் வாகனமாக கருத முடியாது எனக்கூறி, டிரைலர்களை இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும், மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெறாமல் டிரைலர்களை பதிவுசெய்ய போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதனைப்படிக்க...பறவைக் காய்ச்சல் அச்சம் முதல் சபரிமலை சீசன் வரை... மந்தமாகும் கோழி இறைச்சி விற்பனை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News