
கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் திருச்சி மாவட்ட ஆட்சியர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் விடிய காலை வரை ஒரு சில இடங்களில் கன மழையும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திருச்சி மாநகரின் மலைக்கோட்டை, மண்ணச்சநல்லூர், லால்குடி, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், துறையூர், பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், தில்லைநகர், அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக திருச்சியில் 5.75 மில்லிமீட்டர் சராசரி மழைப்பொழிவு அளவு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் துறையூரில் 66 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''வடகிழக்குப் பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழையால் திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இருகரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை, வெள்ளம் நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பொதுமக்கள் தங்களது ஆதார் கார்டு, குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழிப் பைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். நீர்வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலைக்குச் செல்ல வேண்டாம். மேலும் பேரிடர் காலங்களில் பயன்படக்கூடிய மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், எரிவாயு, மருந்து பொருட்கள், முக கவசம் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News