
சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தத்தை தொடங்கியவர் ஓபிஎஸ் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று அளித்த பேட்டியில், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ‘’சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தத்தை தொடங்கியவர் ஓபிஎஸ். சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் கூறியிருந்தார்.

அதிமுகவை பொருத்தவரை பொதுக்குழு நீக்கப்பட்டாயிற்று. சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இருக்கக்கூடாது என தலைமை ஒருங்கிணைப்பாளர் உட்பட மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் அனைவருமே கையெழுத்திட்டிருக்கிறோம். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
இதற்குமுன்பு நடந்ததை நான் கூறுகிறேன். மேற்கொண்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்தான் நிலைப்பாட்டை எடுக்கமுடியும். மேலும் ஓபிஎஸ் பேசியதை முழுமையாக பார்த்துவிட்டுதான் கட்சி மேற்கொண்டு ஆலோசனை செய்யும். எனவே ஓபிஎஸ் பேட்டியை பார்த்தபிறகுதான் கருத்துக்கூற முடியும். பிறகு நான் விளக்கம் அளிக்கிறேன்’’ என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News