‘டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2025’ தொடர் வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் இதில் பங்கேற்ற இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான சரத் கமல் கூறும்போது, “சென்னையில்தான் எனது டேபிள் டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கினேன். இப்போது மதிப்பு மிக்க ஸ்டார் கன்டென்டர் தொடருடன் சென்னையிலேயே எனது டேபிள் டென்னிஸ் வாழ்க்கையை நிறைவு செய்கிறேன்” என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் அந்தஸ்தை மறுவரையறை செய்த மற்றும் எண்ணற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளித்த சரத் கமலுக்கு பொருத்தமான பிரியாவிடை அளிக்கும் டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் தொடராக இருக்கக்கூடும். இந்தத் தொடரில் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்ற சரத் கமல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி நான்கு வீரர்களில் ஒருவராக இருப்பார். மேலும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத் கமல், சினேஹித் சுரவஜ்ஜுலா உடன் இணைந்து தகுதிச் சுற்றில் விளையாட உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்