
ஆளும்கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்று புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஆளும் திமுக அரசு ஜனநாயக அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்திற்கு யாரும் வரக் கூடாது என்பதற்காக பல இடங்களில் சட்ட விரோதமாக பந்தல்கள் அமைத்து, 1000 ரூபாய் பணம் மற்றும் உணவு கொடுத்ததாக திமுக மீது புகார் அளித்தோம்.

தமிழக அமைச்சர்கள் 30 பேரும் ஈரோட்டில் முகாமிட்டு இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெறும் என்றவரிடம், நேற்று அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்... ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்ட பயணம் என்பதால் இலங்கை சென்றுவிட்டார். பாஜக சார்பில் சிபி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை.
இரட்டை இலை சின்னத்திற்கு எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது என டிடிவி தினகரன் பேசியது ஏற்புடையதல்ல. .தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றியதாக முதலமைச்சர் உண்மைக்கு மாறாக பேசுகிறார். கல்விக் கடன் ரத்து, நீட் ரத்து செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆலந்தூர் காவலர் கொல்லப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கு பாதுகாப்பு இல்லை. திரைப்படங்கள் போல தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டதாக என தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News