
காரப்பாக்கத்தில் 9 வயது சிறுவன் கோயில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்கம், வேந்தரசியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை (9), சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர், தரமணியில் உள்ள சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், மாலை நேரத்தில் வேந்தரசியம்மன் கோயில் வளாகத்தில் விளையாடுவதை வழக்கமாக கொண்ட இவர், நேற்று மாலை விளையாடச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என தெரிகிறது.

இதையடுத்து சிறுவனை பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அக்கம் பக்கம் விசாரித்ததில் கோயில் கிணறு அருகே தான் சத்தம் கேட்டதாகக் கூறினர். இதையடுத்து உடனடியாக அங்கு சென்று பார்த்த போது கிணற்றின் மேல் உள்ள வலை கம்பியில் ரத்தக்கறை இருந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர் வந்து கிணற்றில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை,

இதைத் தொடர்ந்து இன்று காலை ஸ்கூஃபா டைவிங் மூலம் உள்ளே சென்று சிறுவனின் உடலை மீட்டு வந்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுவன், கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் மேல் நின்று குதித்ததாகவும், இதில் கிணற்றின் மேல் இருந்த கம்பி வலை உடைந்து கிணற்றில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News