திருப்பூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு முதன்முறையாக நடத்தப்பட்ட புறா பந்தயம். வானில் நீண்ட நேரம் பறக்கும் புறாவிற்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
புறாக்கள் நெடுந்தூரம் வரை பறக்கும் திறனுடையது என்பதால், அவைகள் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கும் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த சூழலில் அதன் நீட்சியாக தற்போது இவ்வகை புறாக்கள் நன்கு பயிற்சி கொடுத்து புறா பந்தயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பந்தயத்திற்காகப் பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவைகள் தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கோவை, தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் இந்த புறா பந்தயங்கள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் முறையாக புறா பந்தயமானது நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட புறாக்கள் வளர்ப்பு சங்கம் சார்பில் பாபு, கார்த்தி, தாமஸ் ஆகியோர் இந்த புறா பந்தயத்தை நடத்தினர். இதில் 8 புறா கூண்டுகள் வீதம் 16 ஜோடி புறாக்கள் பந்தயத்தில் கலந்து கொண்டது.
திருப்பூர் ரயில் நிலையம், தமிழ்நாடு திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் புறா பந்தயமானது நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட புறாக்கள் தங்கள் இருப்பிட பகுதிக்குச் சென்று கீழே இறங்காமல் தொடர்ந்து பறந்து கொண்டிருக்க வேண்டும். எந்த புறாக்கள் கீழே இறங்காமல் அதிக நேரம் பறக்கிறது என்ற நேரத்தை கணக்கிட்டு பரிசுகள் அறிவிக்கப்படும். இரண்டு நாட்கள் நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறும் புறாக்களுக்கு சான்றிதழ்களும், புறா உரிமையாளர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது.