நடிகர் விஜய்யின் வாரிசு குறித்து மறைமுகமாக பேசியுள்ளார்-அண்ணாமலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் மாற்றத்திற்கான மாநாடு நேஷனல் பொறியியல் கல்லூரி எதிரே உள்ள மைதனாத்தில் நேற்று நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி விழாவில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நடிகர் விஜய்யின் வாரிசு குறித்து மறைமுகமாக பேசியுள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “தூத்துக்குடி மண் வீரம் விளைந்த மண்... சுதந்திர போராட்ட வீரர்கள் நிறைந்த மண், கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா. பிறந்த மண் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட மாவட்டம். கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராவின் கதைகளில் 2 கதைகளை தினமும் எனது குழந்தைகளுக்கு கூறி வருகிறேன்” என்று தன் பேச்சை தொடங்கினார்.

பின்னர் பேசுகையில், “தேர்தல் வர இன்னும் 17 மாதங்கள் உள்ளது. அப்போது மொத்தம் 400 இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார். தமிழக அரசின் செயல்பாட்டில் கோளாறு உள்ளது. தமிழகத்தில் நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு உள்ளது. திமுக அரசுக்கு நிர்வாக கோளாறு உள்ளது. மொத்தமாக அறிவாலய அரசு கோளாறு தான். எங்கு பார்த்தாலும் பிரச்னை தான், அதனை தீர்க்க வேண்டிய இடத்தில் இருக்கும் முதல்வர், அதை தீர்ப்பது போன்று தெரியவில்லை. தமிழக முதல்வர் இன்றைக்கு அடிக்கடி பேசுக்கூடிய வார்த்தை திராவிட மாடல். இதுவரை யாரும் திராவி மாடல் என்றால் என்ன என்று கேட்கவில்லை. தூங்குவது முதல் காலை எழுவது வரை திராவிட மாடல் என்று கூறி வருகிறார் முதல்வர்.

image

தமிழகத்தினை சாராயம் ஓடும் மாநிலமாக மாற்றி, எங்கு பார்த்தலும் குடி, குடி என்று சொல்லி பெண்கள் இந்த மாநிலத்தினை வெறுக்கும் அளவிற்கு தமிழகம் குடியில் மூழ்கி இருக்கிறது. டாஸ்மாக்கில் 38 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆண்டுகக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து வருகிறது. எங்கே பார்த்தாலும் லஞ்சம். லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை தான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. திமுகவின் மேடையில் அமைச்சர்கள் பேசுவதை பார்க்கும் போது அங்கு சமூக நீதி இல்லை. பெண்களுக்கு இலவசமாக மகளிர் பேருந்து பயணம் செய்யும் திட்டத்தில் பெண்கள் 888 ரூபாய் சேமிப்பதாக அரசு சொல்கிறது. ஆனால் இலவச பேருந்தினை பெண்கள் பயன்படுத்தவில்லை. பயன்படுத்துவோரும் மீதமாகும் தொகையை பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு போன்றவற்றில் அரசிடமே கொடுக்கின்றனர். இப்படி ஒவ்வொரு குடும்பமும் ரூ. 3,500-ஐ கப்பம் கட்டுவதுபோல அரசிடம் கட்டுகின்றனர். வெள்ளைக்கார அரசு போல இந்த அரசு இருக்கிறது. மக்கள் கப்பம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் கேட்டால் ஜனநாயகம் என்கின்றார்கள்.

நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களில் தமிழக அரசு ஒரு மூட்டைக்கு 60ரூபாய் முதல் 80 ரூபாய் விவசாயிகளிடம் கமிஷன் வசூல் செய்கிறது. கப்பம் கட்டி தான் ஆக வேண்டிய சூழ்நிலையில் தமிழக விவசாயிகள் உள்ளனர். ஒரு பக்கம் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு பார்த்து பார்த்து செய்கிறார். மறுபக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி கொண்டு இருக்கிறார். பாலுக்கு ஜி.எஸ்.டி. விதித்துள்ளதாக ஒரு அமைச்சர் கூறுகிறார். மின்கட்டணம், சொத்து வரி உயர்வுக்கெல்லாம் மத்திய அரசு தான் காரணம் என்று இந்த அரசு கூறுகிறது. இதெல்லாம் உண்மையல்ல. பால் விலை உயர்வுக்கான காரணம், நல்ல காமெடி! 

image

ஒரு படத்தில் நடிகர் வடிவேலு கிணற்றை காணும் என்பது போல, மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பாலத்தை காணவில்லை. முதல்வரின் சொந்த தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு கால்பந்து வீராங்கனை ப்ரியா உயிரிழந்துள்ளார். பெண்களை அமைச்சர்களின் இருந்து காப்பாற்ற காவல்துறையில் சிறப்பு துறை அமைக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள்.... ஆனால் அதற்காக அவர் நடித்த படங்களை பார்க்க சொல்லாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் இன்றையக்கு திரைப்படம் எடுப்பது, நடிப்பது எல்லாம் அவர்கள் தான். பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியிட முடியாத நிலை உள்ளது. அதை வரும் பொங்கலுக்கு மக்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் (வாரிசு படத்தை குறிப்பிட்டு அண்ணாமலை பேசியதாக சொல்லப்படுகிறது).

அங்கன்வாடி, பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய மூட்டை வழங்குவதில் சாதனை படைத்துள்ளார் அமைச்சர் கீதா ஜீவன். சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கனிமொழி எம்பி குற்றச்சாட்டு கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் தான் சமஸ்கிருதம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழக்கு என்று எம்.ஜி.ஆர் காலத்தில் தான் ஒரே ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தமிழ் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு தொடங்கினால் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தருவது எங்கள் பொறுப்பு” என்றார்.

image

கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, தூத்துக்குடி வடக்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post