4 லட்சத்தை இழந்த பிரபல உணவக உரிமையாளர்

சென்னை: ரூ.4 கோடி கடன் கேட்டு 4 லட்சத்தை இழந்த பிரபல உணவக உரிமையாளர்

கடன் வாங்கி தருவதாக பிரபல நாளிதழில் விளம்பரம் செய்து மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ.1 கோடியே 60 லட்சம் போலி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர், 4-வது சவுத் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பிரபல ஓட்டல் உரிமையாளர் பொன்னுசாமி (67). இவர் தனது தொழிலை விரிவுபடுத்த 4 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளார். இதனால் அவருக்கு தெரிந்த கிருஷ்ண காந்த் என்பவர் மூலமாக ஹரஷ் ஆச்சாரியா (எ) சுரேஷ்குமாரை சந்தித்து பேசியுள்ளார்.

image

அப்போது ரூ.4 கோடி கடன் வேண்டுமென்றால் 4 லட்சம் ரூபாய்க்கு ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டும் எனக் கூறி 4 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு அடையார் சர்தார் படேல் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்திற்குள் சென்றவர் திரும்ப வரவில்லை. இதனால் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த அவர் அடையார் காவல் நிலையத்தில் கடந்த 12 ஆம் தேதி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மோசடி பேர்வழியான சுரேஷ் குமார் (43), என்பவரை கோவையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடமிருந்து கார், சில்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா என்ற பெயரில் இருந்த 1 கோடியே 60 லட்சம் ரூபாய் போலி பணம், போலி தங்க நகைகள், 16 செல்போன், லேப்டாப் மற்றும் சிம்காடுகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

image

விசாரணையில் பிரபல தினசரி நாளிதழில் லோன் வாங்கித் தருவதாக விளம்பரம் செய்துள்ளார். அதன் பேரில் கிருஷ்ண காந்த் என்பவர் இவரை அணுகி பொன்னுசாமிக்கு கடன் கேட்டு சந்திக்க வைத்துள்ளார். அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு தப்பி விட்டார். இவர் மீது ஏற்கனவே கோயம்புத்தூரில் செம்மரம் கடத்தல் வழக்கு, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Post a Comment

Previous Post Next Post