ஸ்விக்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி டெலிவரி ஊழியர்கள் மூன்றாவது நாளாக சென்னையில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உணவு மற்றும் இதர பொருட்களை ஸ்விக்கி ஊழியர்கள் டெலிவரி செய்து வருகிறார்கள். இதில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில் தற்போது அந்த பணி நேரம் 16 மணிநேரமாக நீட்டிக்கப்பட்டு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஸ்விக்கி நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பை எதிர்த்து என டெலிவரி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இன்றோடு 3வது நாளாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யூ தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் தலையிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி , மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
போராட்டம் நடத்திய பிறகு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதியிடம் புகார் மனுவை ஸ்விக்கி ஊழியர்கள் அளித்துள்ளனர். மேலும் தொடர் போராட்டம் காரணமாக உணவு டெலிவரி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
