கூகுள் மேப்-ஐ நம்பி சென்ற ஒருவர், ஓசூரில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட கார் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர் உயிர்த்தப்பினர்.
கர்நாடக மாநில எல்லையில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, சந்தாபுரா, ராம்சாக்ரா, முத்தாநல்லூர், பிதுருக்குப்பே உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி தண்ணீர் ஆர்ப்பரித்து தமிழக எல்லையான ஓசூர் பகுதியை நோக்கி வருகிறது. அவ்வாறு வரும் வெள்ள நீர் தமிழக எல்லையில் உள்ள சாக்கரை ஏரி நிரம்பி பேகேப்பள்ளி கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்கிறது. தரைப்பாலத்தின் மேல் அதிக அளவு வெள்ளநீர் செல்வதால் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சர்ஜாபூரை சேர்ந்த ராகேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் நள்ளிரவில் சொகுசு காரில் ஓசூரில் இருந்து சர்ஜாபுரம் செல்ல கூகுள் மேப் பாலோ செய்து சென்றுள்ளனர். அப்போது கூகுள் மேப் பேகெப்பள்ளியில் தண்ணீரில் மூழ்கிய தரைபாலத்துக்கு மேலே அழைத்து சென்றுள்ளது. மேப்-ஐ நம்பி தரைப்பாலத்தின் நடுவில் அவர் சென்றபோது, கார் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டு நின்றுவிட்டது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாத அவர்கள் சற்று சுதாரித்து கொண்டு நம்பர் 100க்கு கால் செய்து உதவி நாடியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், அப்பகுதி ஒன்றிய குழு உறுப்பினர் முரளி ஆகியோர் விரைந்து சென்று ஜெசிபி மற்றும் கயிறு கட்டி சென்று முதலில் காரில் இருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். பிறகு வெள்ளத்தில் சிக்கி கொண்ட காரையும் மீட்டனர். கூகுள் மேப்-ஐ நம்பி சென்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய சம்பவம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News