ஈரோடு ரயில் நிலையத்தில் பயணியிடம் கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் டீ விற்பனையாளர், தான் திருடிய செல்போனால் மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் பெங்களூரைச் சேர்ந்த கோபாகுமார் என்பவர் கன்னியாகுமரி - பெங்களூரு செல்லும் விரைவு ரயிலில் கோட்டயத்தில் இருந்து பெங்களூருவுக்கு பயணித்துள்ளார். இவர் தனது கைப்பையில் சுமார் 1லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள தங்க வளையல்கள், காதணிகள், மோதிரங்கள், வைர நெக்லஸ், செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார். ரயில் ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது கோபாகுமார் தூங்கிய நேரத்தில் அவர் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர் திருடி சென்றிருப்பதை அறிந்து ஈரோடு இருப்பு பாதை போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு தொடக்கத்தில் எந்தவொரு தடயமும் கிடைக்காமல் திணறினர். சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு திருடப்பட்ட பையில் இருந்த செல்போன் ஆன் செய்யப்பட்டதால் கிடைத்த சிக்னலை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் ஈரோடு ரயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு டீ விற்பனையாளராக பணியாற்றி வந்த பைசல், கோபாகுமாரிடம் திருடிய செல்போனை அண்மையில் வேறொருவருக்கு விற்பனை செய்ததை கண்டறிந்தனர். பிறகு பைசலை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். தான் திருடிய செல்போனாலேயே போலீசில் மாட்டிக்கொண்டார் பைசல்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News