தூத்துக்குடி: மேற்கூரை இடிந்ததால் இடிபாடுகளில் சிக்கி கர்ப்பிணி மகளுடன் தாயும் உயிரிழப்பு

தூத்துக்குடி அண்ணாநகரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி அண்ணாநகர் 3 வது தெருவில் வசித்து வருபவர் முத்துராமன். கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி காளியம்மாளுடன் வசித்து வருகிறார். இவர்களது மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகாவுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன் மார்த்தாண்டம்பட்டியை சேர்ந்த செல்வராஜூக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கர்ப்பினியான இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் மார்த்தாண்டம்பட்டியில் வளைகாப்பு நடத்தி தூத்துக்குடியிலிருந்த தங்கள் வீட்டுக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

image

இன்று அதிகாலை தந்தை, தாயுடன் அவர்களின் மகளான கர்ப்பிணி கார்த்திகா அயர்ந்து தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அதிகாலை 4 மணியளவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதன் இடிபாடுகளில் சிக்கிய தாய் மற்றும் கர்ப்பிணி மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுக்கி உயிரிழந்தனர். வீட்டின் ஒரு ஓரத்தில் படுத்திருந்த முத்துராமன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல் நிலைய போலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிய இரு உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த முத்துராமன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post