சென்னை: தாழ்வான பகுதிகளில் வடியாத மழைநீர்; பொதுமக்கள் அவதி

சென்னையில் பெய்த பெருமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் வடியாமல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
 
சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் 3வது நாளாக மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. குளம் போல் காட்சியளிக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீர் வடிவதற்கு வழியின்று தேங்கி நிற்பதால் பொதுமக்கள் இன்னலை சந்தித்தனர்.
 
இதே போன்று அசோக் நகர் பகுதியில் மழைநீர் வடியாமல் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். 33 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அப்பகுதி மக்கள் பரிதவித்து வருகின்றனர். வீடுகளை விட்டு வெளியேறவும் முடியாமல், வீட்டினுள் இருக்கவும் முடியாமல் மக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
 
image
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள லேக் வியூ சாலையில் மூன்று நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாமல் உள்ளது. சென்னை கொளத்தூரில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.கே.எம்.காலனி, பெரவள்ளூர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் மின் விநியோகம் இல்லாததால் வீட்டில் இருந்து பணிபுரியும் ஐடி ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெப்பம் போல் தேங்கிய நீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை கே.கே.நகர் பிரதான சாலைகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர். ஈ.எஸ் ஐ. மருத்துவமனை, அரசு புறநகர் மருத்துவமனை, அரசு புனர்வாழ்வு மையம், பி.ஹெச்.இ.எல். குடியிருப்பு உள்ளிட்ட வளாகங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
 
சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், அமுதம் காலனி ஆகிய இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் 317 இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், இதுவரை 123 இடங்களில் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post