
கோவை விமானப்படை அதிகாரி மீது பெண் அதிகாரி அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கை காவல்துறை விசாரிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் விமானப் படை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர். விமானப் படை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என கூறி குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மேஜிஸ்திரேட் நீதிமன்றம், கைது செய்யப்பட்ட அதிகாரியை விமானப்படை அதிகாரிகள் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோவை காவல்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை கோவை மாநகர காவல்துறை விசாரிக்கலாம் எனவும், அதேசமயம், கைதான அதிகாரி விமானப் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார் எனவும் நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.

கைதான அதிகாரியை விசாரிக்க வேண்டுமெனில் முன்கூட்டியே விமானப் படையினருக்கு காவல்துறை தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், காவல்துறை விசாரணைக்கு ஏற்ற சூழலை விமானப்படையினர் உருவாக்கித் தர வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மாநகர காவல்துறையின் விசாரணைக்கு எந்தவித குறுக்கீடையும் விமானப் படையினர் ஏற்படுத்தக் கூடாது என்றும், விசாரணை முடிந்த பிறகு தயார் செய்த ஆதாரங்களின் நகலை விமானப்படையினரிடமும் காவல்துறை ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News